எது வந்தாலும் தாங்குவோம்... இன்னும் 20 வருடத்திற்கு எனர்ஜி இருக்கு... பலம் காட்டும் டி.டி.வி.தினகரன்..!
5 பொதுத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்கிற அனைத்து சக்தியையும் இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறார். இன்னும் 20 ஆண்டுகள் உங்களோடு சேர்ந்து உழைக்கும் மன உறுதியையும், உடல் உறுதியையும் கடவுள் கொடுத்திருக்கிறார்.
சின்னத்தைப் பெற்றதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அருகே குன்னத்தூரில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். பின்னர், திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய டி.டி.வி. தினகரன், சிறையிலிருந்து சசிகலா வெளியில் வந்தவுடன் அவரை பொதுச்செயலாளராக அறிவிக்கப் போவதாக அதிமுகவில் சிலர் பேசி வருவதாகக் கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்களை அவமதித்தவர்களுடன் சசிகலா ஒருபோதும் சேரமாட்டார் என்றும் தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு வேகத்தடையாக இருப்பவர்கள் தான் விலகி சென்றுள்ளார்கள். ஒருவரை கட்சியில் இருந்து நீக்குகிறோம் என்றால் முறையாக விசாரித்து அதன் பிறகே நடவடிக்கை எடுக்கிறோம். பின்னால் இருந்து இயக்குவதால் பலர் நம்மிடம் இருந்து பிரிந்து செல்கிறார்கள் என்றார். 5 பொதுத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்கிற அனைத்து சக்தியையும் இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறார். இன்னும் 20 ஆண்டுகள் உங்களோடு சேர்ந்து உழைக்கும் மன உறுதியையும், உடல் உறுதியையும் கடவுள் கொடுத்திருக்கிறார்.
இந்த இயக்கம் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கம் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் ஜெயலலிதா வழியில் இந்த இயக்கத்தை செயல்படுத்த உருவாக்கப்பட்ட ஜனநாயக ரீதியான ஆயுதம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார்.
வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நமது இயக்கத்தை நிச்சயம் பதிவு செய்து விரைவில் சின்னம் வழங்கும். உள்ளாட்சி தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என்று உறுதியுடன் தெரிவிக்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.