இடைத்தேர்தலில் தி.மு.க. பலே திட்டம் ! முதலமைச்சர் எடப்பாடி அதிரடி குற்றச்சாட்டு !
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்து வெற்றி பெற திமுக முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த பின் செய்தியார்களிடம் பேசினார்.
அப்போது , இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்து தி.மு.க., வெற்றி பெற முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார். நாங்குநேரி , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் செல்வாக்கோடு அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் எடப்பாடி தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர், தெலுங்கானா கவர்னராக தமிழசை சவுந்திரராஜன் பொறுப்பேற்றுள்ளது தமிழர்களுக்கு பெருமை. அவரை கவர்னராக நியமித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட கூடாது என மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். தமிழக அரசின் முயற்சியால் தான் மத்திய சுற்றுசூழல்அமைச்சகம் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி மறுத்துள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடுகளைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர். எடப்பாடி பழனிசாமி பேசினார்