இனி முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி... டாக்டர் பட்டத்தால் பொறுப்பு கூடிவிட்டதாக முதல்வர் மகிழ்ச்சி!
இன்றைய தினம் நான் டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் என்னுடைய பொறுப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. தமிழக அரசு உயர்க் கல்வி துறைக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டுவருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
ஏ.சி சண்முகம் நடத்திவரும் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்புத் துறை செயலாளர் சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை இயக்குனர் ராஜா சபாபதி, நடிகை ஷோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏ.சி. சண்முகம் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
கவுரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுகொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “இன்றைய தினம் நான் டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் என்னுடைய பொறுப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. தமிழக அரசு உயர்க் கல்வி துறைக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு இது குறித்து பரிசீலித்து வருகிறது.” என்று தெரிவித்தார்.
விழாவில் தமிழக அமைச்சர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.