முரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்!
முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலம் என்று டாக்டர் ராமதாஸ் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார் என்றும் அப்படி நிரூபிக்காவிட்டால், அவரும் அவருடைய மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா எனக் கேள்வி கேட்டிருந்தார். மேலும் ட்விட்டர் பதிவில் முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவை இணைத்து பதிவிட்டிருந்தார்.
முரசொலி நில விவகாரம் முடிந்துபோன பிரச்னை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 'அசுரன்' படத்தைப் பார்த்து, அது தொடர்பாக வெற்றி மாறனையும் தனுஷையும் பாராட்டி ட்விட்டர் போட்டதிலிருந்து முரசொலி நில விவகாரம் தீவிரமாகப் பேசப்பட்டுவருகிறது. ‘அசுரன்’ படத்தை ஸ்டாலின் பாராட்டியதை வைத்து, “‘அசுரன்’ கற்றுத் தந்த பாடத்தையேற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதற்கு உடனே பதில் அளித்த ஸ்டாலின், முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலம் என்று டாக்டர் ராமதாஸ் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார் என்றும் அப்படி நிரூபிக்காவிட்டால், அவரும் அவருடைய மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா எனக் கேள்வி கேட்டிருந்தார். மேலும் ட்விட்டர் பதிவில் முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவை இணைத்து பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சூடுபிடித்த நிலையில் பாஜகவும் பாமகவுக்காகக் களம் குதித்தது. முரசொலி அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை மீட்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். முரசொலி நிலம் தொடர்பாக திமுக, பாமக, பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
“முரசொலி நில விவகாரம் என்பது முடிந்துபோன பிரச்னை. அது தொடர்பாக கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் பல்வேறு கட்டிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த தீர்வு அரசின் பரிசீலனையில் இருந்துவருகிறது” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.