சட்டப் பேரவைக்குள் கருப்புச் சட்டையில் வந்த திமுக எம்எல்ஏக்கள்… ஏன் தெரியுமா?
2018-19 ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக் கூட்டத்தில் பங்கேற்க சட்டசபைக்கு வந்த திமுக எம்எல்ஏ.,க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
2018-19 ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தமிழக சட்டப பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அந்த கூட்டத்தொடர் ஜனவரி 12-ந் தேதி வரை நீடித்தது.
இந்த நிலையில், பட்ஜெட் குறித்த அறிவிப்பை சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 7-ந் தேதியன்று வெளியிட்டார். அதில், சட்டப் பேரவையின் அடுத்த கூட்டம் இன்று காலை காலை 10.30 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் .
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதைக் கண்டித்து, இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்தனர்.