மீண்டும் பிரச்சார களத்தில் கெத்தாக களமிறங்கும் கேப்டன்... தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வடசென்னை மக்களவை தொகுதி வேட்பார் அழகாபுரம் மோகன்ராஜிக்கு ஆதரவு தெரிவித்து நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வடசென்னை மக்களவை தொகுதி வேட்பார் அழகாபுரம் மோகன்ராஜிக்கு ஆதரவு தெரிவித்து நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு இழுபறிக்கு இடையே அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. பின்னர் அவர்களுக்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கூட்டணி ஒப்பந்தத்தின் போது தேமுதிக தலைவர் கண்டிப்பாக பிரச்சாரம் செய்ய வேண்டும் அதிமுக கூறியிருந்தது.
இதற்கிடையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரியில் சென்னை திரும்பிய கட்சித் தலைவர் விஜயகாந்த் மருத்துவர்கள் ஆலோசனைபடி தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது கட்சி அலுவலகத்துக்கு சென்று, கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இருந்தாலும், விஜயகாந்த் எப்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அக்கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர் நடத்திவரும் கேப்டன் தொலைக்காட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறிய பேட்டி ஒன்றை விஜயகாந்த் அளித்துள்ளார், அந்தப் பேட்டியில், “என் உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் பிரச்சாரத்துக்கு வந்து பேசுவேன். மருத்துவர்கள் அறிவுரைப்படிதான் வர முடியும் என்று தெரிவித்திருந்தார். மேலும் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று பிரேமலதாவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், வடசென்னை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து நாளை விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தேமுதிகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.