அறிக்கை விடுற அளவுக்கு கேப்டன் நல்லா இருக்கிறாரா? பிரேமலதாவை நோக்கிப் பாயும், தே.மு.தி.க.வின் கண்ணீர் கோரிக்கைகள்
விஜயகாந்தின் கருத்துக்களாக, உத்தரவுகளாக இப்போது அவரது கட்சியிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் அறிக்கைகளையும் அரசியல் விமர்சகர்களும், அவரது கழக நிர்வாகிகளுமே இப்படி சந்தேக கோணத்தில் பார்ப்பதுதான் அதிர்ச்சியே.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்று பார்வையிட்டு, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவார். என்று கேப்டன் பெயரில் வந்திருக்கும் அறிக்கையானது அவரது கட்சியினரை சந்தோஷிக்க வைத்திருப்பதை விட சந்தேகப்படவே வைத்திருக்கிறது. காரணம்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது பெயரில் வெளியான அரசு மற்றும் அரசியல் தொடர்பான அறிவிப்புகள், பிற்காலத்தில் அவை உண்மையிலேயே ஜெயலலிதா அறிவிச்சது தானா? எனும் சந்தேக விவாதத்தை கிளப்பியுள்ளன. இந்நிலையில், விஜயகாந்தின் கருத்துக்களாக, உத்தரவுகளாக இப்போது அவரது கட்சியிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் அறிக்கைகளையும் அரசியல் விமர்சகர்களும், அவரது கழக நிர்வாகிகளுமே இப்படி சந்தேக கோணத்தில் பார்ப்பதுதான் அதிர்ச்சியே.
இது பற்றி பேசும் தே.மு.தி.க.வினர் “ இப்படி சந்தேகிக்கவே எங்களுக்கு சங்கடமா இருக்குது. ஆனாலும், கேப்டன் ரெகுலர் அரசியல் குறித்தெல்லாம் அலசுறார், அறிக்கை விடுறார் அப்படின்னா அவரை சந்திக்க எங்களுக்கு அனுமதி தர வேண்டிதானே? அப்படியான வாய்ப்பு இல்லாம போகுறதாலேதானே நாங்க டவுட் பண்றோம். மிகவும் உடல் நலிவுற்றிருக்கும் கேப்டன், அமெரிக்காவில் உயர் சிகிச்சைக்கு சென்றார். திரும்பி வரும்போது பழைய சிங்கமாக கேப்டன் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கலை.
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியவர், நேராக கலைஞரோட சமாதிக்கு சென்றார். நடக்க கூட முடியாமலும், எதையும் பேச முடியாமலும் அவர் தள்ளாடிய வீடியோவை பார்த்து எங்களுக்கு ரத்தக்கண்னீர் வந்துடுச்சு. கலைஞருக்கு பின் இந்த புரட்சிக் கலைஞர்தான் தமிழகத்தை வலுவா ஆளுவார்!ன்னு நாங்க நினைச்ச நிலையில் அதே கலைஞர் சமாதியில் கேப்டன் தள்ளாடி நின்ற் நிலையை காலத்துக்கும் மனசு மறக்காது.
எங்களோட சந்தேகம், வேதனையை மேலும் அதிகமாக்குற விதமாக அண்ணியார் பொருளாளர் பதவியேற்றது, கேப்டனின் மகன் அரசியலுக்குள் இறங்குறதும் நடந்துச்சு. இதையெல்லாம் பார்த்து நாங்க சந்தோஷப்படாமல் வருத்தப்பட காரணம், தலைவர் மிகவும் நலிவுற்று இருக்குறதாலேதானே இவங்களெல்லாம் இப்படி சீனுக்கு வர்றதும், பதவியை கையில் எடுக்குறதும் நடக்குதுன்னு!தான்.
தலைவர் பெயரில் அடிக்கடி வந்து விழும் அறிக்கைகள் உண்மையில் அவரோட கருத்துக்கள்தானா? தலைவர் தொண்டர்களான எங்க கண்ணு முன்னாடி காட்டுங்க. எங்களுக்கு புரியுதோ புரியலையோ நாலு வார்த்தைகள் அவர் எங்ககிட்ட பேசட்டும். கண்ணீர் வழிய இதை கேட்டுக்கிறோம் அண்ணி.” என்கிறார்கள். பிரேமா மேடம் ப்ளீஸ் இதை கவனியுங்களேன்!...