“ஒண்ணுமில்ல தம்பி டங் ஸ்லிப் ஆயிடுச்சி” எடப்பாடியிடம் எக்ஸ்ப்ளைன் பண்ண திண்டுக்கல் சீனி...
“ஒண்ணுமில்ல தம்பி அம்மாகிட்டேர்ந்து கொள்ளையடிச்சாங்கனு பேசுறதுக்கு ஸ்லிப் ஆகிட்டேன் என எடப்பாடியிடம் பழனிசாமியிடம் திண்டுக்கள் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் வெற்றி விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "18எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரிடம் சென்று முதல்வரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் நாங்கள் சும்மாவா இருக்க முடியும். இதற்கு விளக்கமளிக்க 18 பேருக்கும் ஒருமாதம் வரை அவகாசம் கொடுக்கிறார் சபாநாயகர்.
ஆனால் அவர்கள் விளக்கம் அளிக்காமல் மைசூர், அமெரிக்கா என்று ஜாலியாக சுற்றிக் கொண்டுள்ளனர். அவர்கள் அம்மாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர் அல்லது ஸ்டாலின் மூலம் வாங்கிக் கொண்டுள்ளனர்’’ என்று அடுத்த சர்ச்சைக்கு திரி கொளுத்தினார்.
இந்தப் பேச்சு தொண்டர்கள் மட்டுமின்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை அதிர்ச்சி அடைய வைத்தது. உடனே சீனியிடம் பேசிய முதல்வர், “என்னண்ணே... இப்படி பேசிட்டீங்க? என்று கேட்க ஒண்ணுமில்ல தம்பி அம்மாகிட்டேர்ந்து கொள்ளையடிச்சாங்கனு பேசுறதுக்கு ஸ்லிப் ஆகிட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் உடனே மறுப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில், ’புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழை வைத்து 30 வருடங்களுக்கும் மேலாக உடன் இருந்த சசிகலா மற்றும் குடும்பத்தினர் அம்மாவுக்குத் தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்ற கருத்து பட பேசினேன், ஆனால், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவை பற்றி தவறாக நான் எதுவும் பேசவில்லை. நான் என்றைக்கும் அம்மா அவர்களின் விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.