Asianet News TamilAsianet News Tamil

ஊழல் அதிகாரிகளை பாதுகாக்கும் சட்டம் தாக்கல்.......ராஜஸ்தான் சட்டசபையில் கடும் அமளி, வெளிநடப்பு....

curruption officers in rajasthan
curruption officers in rajasthan
Author
First Published Oct 23, 2017, 7:30 PM IST


ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜனதா அரசு, ஊழல் அதிகாரிகளை பாதுகாக்கும் சட்டத்தை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தது. இதற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இருவர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த புதிய கிரிமினல் சட்டத்திருத்தத்தின் படி முன்னாள் நீதிபதிகள், கலெக்டர்கள், மாஜிஸ்திரேட்கள், அரசு ஊழியர்கள் மீது கூறப்படும் புகார்கள் மீது விசாரணை செய்யும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பதாகும்.

மேலும்,தனி மனிதர்கள் அரசு அதிகாரிகள் மீது கூறும் புகார்களையும், ஊடகங்கள் அரசின் அனுமதியில்லாமல் வெளியிடக்கூடாது. அரசு அதிகாரிகளின் புகைப்படம், முகவரி, குடும்ப விவரம் உள்ளிட்ட எதையும் வெளியியக்கூடாது என்பதாகும். அவ்வாறு மீறி வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.  

எம்.எல்.ஏ.க்கள் அரசு அதிகாரிகள் மீது கூறப்படும் எந்த புகார்களையும், அரசின் அனுமதியில்லாமல் விசாரணைக்கு நீதிமன்றங்களும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவசரச்சட்டமாக கடந்த செப்டம்பர் 7-ந்தேதி வசுதந்திரா ராஜே தலைமையிலான அரசு அறிவித்தது. இதையடுத்து, இதைச் சட்டமாக்கும் பொருட்டு நேற்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டமசோதாவை அறிமுகம் செய்தது.

இதற்கு பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கன்ஷியாம் திவாரி, நார்பாத் சிங் ராஜ்வி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஜெயின், ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனுத் தாக்கல் செய்தார். மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஜெய்பூரில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினார். ஆனால், அவரையும், அவரின் ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

திரும்பப் பெற வலியுறுத்தல்…..

இதற்கிடையே அவசரச் சட்டத்தை திரும்பப்ெபற “தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா” ராஜஸ்தான் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. ராஜஸ்தான் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் “தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா” கூறியிருப்பதாவது-

ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ள அவசரச்சட்டம் ஊடங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் கருவியாகும். போலி எப்.ஐ.ஆர் பதிவில் இருந்து நீதித்துறை மற்றும் அரசுஅதிகாரிகளை காக்கும் என்ற அடிப்படையில் இந்த அவசரச்சட்டத்தை கடந்த மாதம் அரசு பிறப்பித்தது என கூறப்பட்டது. ஆனால், உண்மையில், ஊடகங்களுக்கு நாசகார விளைவையும், தவறு செய்யும் அரசு அதிகாரிகள் பதுங்கிக்கொள்ளவும் இந்த சட்டம் உதவும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பத்திரிகைகளுக்கான சுதந்திரத்தை பறிக்கும் சட்டமாகும்.

அதேசமயம், தவறு செய்யும் அரசு அதிகாரிகள் குறித்து நியாயமான முறையில், நடுநிலைமையுடன் , பொறுப்புணர்வுடன் செய்தி வெளியிடுவதற்கு நாங்கள் எப்போதும் துணை இருப்போம். அதேசமயம், தவறுசெய்யும் அதிகாரிகளை பொதுநலன் கருதி வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கொடூரமான பிரிவு இந்த சட்டத்தில் இருக்கிறது.

பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்து விளைவிக்கும், நாசகார அவசரச்சட்டத்தை முதல்வர் வசுந்தரா ராஜே திருப்பபெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios