இதற்கெல்லாம் பதிலளித்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை! எடப்பாடி பளீச்!
தமிழகத்தில் அரசின் சார்பில் பரவலாக எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இன்று புதுக்கோட்டையில் இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரூ.619.7 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். 4.64 கோடி ரூபாய் மதிப்பிலான 24 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்துப் பேசினார்.
அப்போது, “ அதிமுக ஆட்சி மீது தேவையற்ற வகையில் அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.” என்று கூறினார்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், டெங்குவால் இறப்பு ஆகியவை குறித்து பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால், அதுகுறித்தே அவரது பேச்சும் இருந்தது. டெங்கு பற்றி குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “டெங்கு காய்ச்சலை சவாலாக எடுத்துக்கொண்டு அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் செயல் வடிவம் பெறும்போது அதன் வலிமையை மக்கள் நிச்சயம் உணர்வார்கள். டெங்குவை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அயராது உழைத்து வருகின்றனர். எதிர்க் கட்சிகள் டெங்கு காய்ச்சலையும் அரசியலாக்கி வருகின்றன. டெங்கு கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். டெங்கு காய்ச்சலை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.” என்று பேசினார்.
மேலும், “புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பயனாளிகளுக்கு திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டுள்ளன. 81,49 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கப்பட்டதில் விவசாயிகள் பலர் பயனடைந்துள்ளனர். புதுக்கோட்டையில் 21 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.ஏழைகளுக்கு பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது” என்று அவர் பேசினார்.