மக்களவை தேர்தலில் அதிரடி... தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் களமிறங்கும் பாஜக..! அமித்ஷாவுக்கு எந்த தொகுதி..?
மக்களவை தேர்தலை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாஜக தலைவர்கள் களமிறங்கத் தயாராகி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க உள்ளது.
மக்களவை தேர்தலை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாஜக தலைவர்கள் களமிறங்கத் தயாராகி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் பூத் கமிட்டின் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக அடுத்த மாதம் பா.ஜனதா மூத்த தலைவர்கள் தமிழத்தில் முகாமிட உள்ளனர். இந்த கூட்டங்களில் பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பா.ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து தமிழக பா.ஜனதா மாநில செயலாளர் புரட்சி கவிதாசன் கூறுகையில், ’’பிரதமர் மோடி, அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின்கட்காரி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர். பிரதமர் மோடி பிப்ரவரி 10 மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகம் வந்து பொதுக் கூட்டங்களில் பேசுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர் வருகிற 12-ந்தேதி இந்த தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய கொங்கு மண்டல தொகுதிகளை குறி வைத்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோருக்கு டெல்டா மாவட்டங்களும், வட மாவட்டங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் தவிர மேலும் சில பா.ஜனதா மூத்த தலைவர்களும் அடுத்த மாதம் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர்.
இதனால் 39 எம்.பி. தொகுதிகளிலும் பா.ஜனதா தொண்டர்களை தேர்தலுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளை பா.ஜனதா மேலிடம் செய்து முடிக்க உள்ளது. அதன்பிறகு அவர்கள் மூலம் 39 தொகுதிகளிலும் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்’’ என அவர் தெரிவித்தார்.