அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் !! என்ன தெரியுமா ?
அதிமுகவில் பதவி நியமனங்கள், கட்சியில் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டச் செயலாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் நிர்வாக வசதிக்காகவும், அதிருப்தியாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் அவ்வப்போது சில அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் , அதிமுக அமைப்புச் செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன், செ.தாமோதரன் ஆகியோர் நியமிகப்படுகின்றனர்.
தேர்தல் பிரிவு இணைச் செயலாளராக கோபாலகிருஷ்ணனும், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலராக தாமோதரனும் நியமிகப்படுகின்றனர்.
இதுவரை அதிமுகவில் இரண்டு பிரிவுகளாக இருந்த கடலூர் மாவட்டம் தற்போது கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.
கடலூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாவட்ட செயலாளராக அருண்மொழித்தேவனும், கிழக்கு மாவட்ட செயலாளராக கே.ஏ.பாண்டியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.