அரசியல் கட்சி தீர்மானித்தால் சென்சார்டு போர்டு எதற்கு? - விஜய்க்கு பாராட்டு தெரிவித்த விஷால்...
மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளையும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
கடந்த தீபாவளி அன்று விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். இதில் ஜி.எஸ்டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் விமர்சிப்பது போன்ற சமூக அக்கறை கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கு பாஜக மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்க கோரி வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்ப்பதாக தெரிவித்தார்.
ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுவதாகவும் அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம் எனவும் தெரிவித்தார்.
இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம் எனவும் ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது எனவும் தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு எனவும் குறிப்பிட்டார்.
மேலும், மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளையும் நடிகர் விஷால் தெரிவித்தார்.