4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் …. திமுக வேட்பாளர்கள் ரெடி ! இவங்க தான் அந்த நான்கு பேர் !!
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி சூலூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாள் யார் ? யார் ? என அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம், 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பிர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும்போது திருப்பரங்குன்றம் தொகுதியில், நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், 70 ஆயிரம் ஓட்டுகள் பெற்றிருந்தார். மறைந்த, அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸுக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரும் படிவத்தில், ஜெயலலிதா கைரேகை சந்தேகத்துக்குரியது என, உயர்நீதிமன்றத்தில், சரவணன் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவருக்கு, மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்கு பின், தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டதால், அவரது, எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது . ஆனால் செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். எனவே அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்கே திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சூலுார் தொகுதியில், கடந்த தேர்தலின்போது திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளர், மனோகரன், மறைந்த, எம்எல்ஏ கனகராஜிடம், 36 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
காங்கிரசின், 41 வேட்பாளர்களில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர், மனோகரன். எனவே, இந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, அத்தொகுதியை ஒதுக்க வாய்ப்பு இல்லை. தி.மு.க., பிரமுகர்கள், ராஜேந்திரன், மன்னவன், தளபதி முருகேசன் ஆகிய, மூவரில் ஒருவருக்கு, 'சீட்' கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, ஒட்டப்பிடாரம் தொகுதியில், கடந்த பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த, புதிய தமிழகம் கட்சி தலைவர், கிருஷ்ணசாமி போட்டியிட்டார். தற்போது, அதிமுக கூட்டணியில், தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே, திமுக வேட்பாளராக, ஒட்டப்பிடாரம் ஒன்றிய, திமுக செயலர், சண்முகய்யாவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து நெல்லையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாககளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து 4 இடைத் தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.