மெகபூபா முஃப்தி ராஜினாமா...! பிடிபி உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - காங். திட்டவட்டம்
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கான ஆதரவை பாஜக விலகிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தமது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலாகிறது. பிடிபியுன் காங்கிரஸ் கூட்டணி கட்சி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி அமைந்தது. மக்கள் ஜனநாயக கட்சி 28, பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15,
காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
பெரும்பான்மையை பெற 45 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், பாஜகவும் - பிடிபி கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. பிடிபி கட்சியின்
மூத்த தலைவர் முப்தி முகமது சையது முதலமைச்சரானார். பாஜகவின் நிர்மல்குமார் சிங் துணை முதலமைச்சரானார்.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு முப்தி முகமது சையது உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து மெகபூபா முப்தி
முதலமைச்சராக பதவியேற்றார்.
மெகபூபா முப்தி முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே பாஜகவுடன் கருத்து வேறுபாடு தொடர்ந்து வந்தது. ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீரில்
அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதை மெகபூபா முப்தி விரும்பவில்லை. இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, மெகபூபா முப்தி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மெகபூபா முப்தி தனது
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா தொடர்பான கடிதத்தை ஆளுநர் என்.என்.வோராவுக்கு மெகபூபா முப்தி அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலாக உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், பிடிபியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் என்ன நடந்ததோ அது நல்லதுக்கே என்றும் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். உமர் அப்துல்லாவோ, மெகபூபாவை ஆதரிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என கூறியுள்ளார்.