வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்தான்…ரிசர்வ் வங்கி திட்டவட்ட அறிவிப்பு
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க தேவையில்லை என்பது போன்ற உத்தரவு ஏதும் நாங்கள் பிறப்பிக்க என்று ரிசர்வ் வங்கி இன்று விளக்கம் அளித்துள்ளது.
அதேசமயம், வங்கிக்கணக்குடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்தான், அதில்மாற்றமில்லை என்றும் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் பல்வேறு உதவித் திட்டங்களின் கீழ் நிதி உதவிகளைப் பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான திட்டங்களுக்கான நிதியானது வங்கிகள் மூலமாக வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குடன், தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்தியஅரசு அறிவுறுத்தி இருந்தது.
இதன் பொருட்டு வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்ககளுக்கு எஸ்.எம்.எஸ், இமெயில் மூலம் ஞாபகப்படுத்தி தொடர்ச்சியாக செய்திகள் அனுப்பி வருகின்றன. அத்துடன் டிசம்பர் 31-க்குள் அவ்வாறு இணைக்காவிட்டால், வங்கிக் கணக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு தில்லியை சேர்ந்த, யோகேஷ் சப்கலே என்பவர் ரிசர்வ் வங்கியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.அதற்கு ஆர்பிஐ அனுப்பியுள்ள பதிலில், “வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ஆணை எதுவும் தாங்கள் பிறப்பிக்கவில்லை” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது பெரும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுதான் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது, ரிசர்வ் வங்கி பிறப்பிக்கவில்லை என தகவல்கள் பரவின.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி இன்று புதிய அறிவிப்பு வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது-
வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. அவ்வாறு ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் வகையில் வங்கிக்கணக்குடன், ஆதார் எண்ணை இணைப்பது என்பது கட்டாயம் தான். அதில் மாற்றமில்லை.
2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், ஜூன் மாதம் கொண்டுவரப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில், வங்கிக்கணக்குடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.