குழிக்குள், போராட்டமும்; தீபாவளி கொண்டாட்டமும் - ராஜஸ்தானில் 650 பெண்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி
ராஜஸ்தான் அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து, 650 பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தியதோடு, தீபாவளிப் பண்டிகையையும் கொண்டாடினர்.
ஜெய்ப்பூர் அருகே நிந்தார் கிராமம் உள்ளது. ஜெய்ப்பூர் வீட்டுவசதி வாரியம் இந்த கிராம மக்களின் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த கிராமமக்களுக்கு இழப்பீடும் அறிவித்தது. ஆனால், அரசு அறிவித்த இழப்பீடு போதவில்லை எனக் கருதிய மக்கள் நிலம் கையகப்படுத்த கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விவசாயிகளும்,பெண்களும் தொடர் போராட்டத்தை அங்கு நடந்தி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளிப்பண்டிகை அன்று, அந்த கிராமத்தைச் சேர்ந்த 650க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் தங்கள் நிலங்களில் கழுத்தளவு குழி வெட்டி அதனுள் இறங்கி வித்தியாசமாக போராட்டம் நடத்தினர். மேலும், அந்த குழிக்குள் இருந்தவாரே பூஜைகள் செய்து தீபாவளிப் பண்டிகையையும் கொண்டாடினர்.
இது குறித்து நிந்தார் பச்சாவோ யுவகிசான் சங்கர்ஸ் சமிதி அமைப்பின் தலைவர் நாகேந்திர சிங் செகாவத் கூறுகையில், “ எங்கள் விவசாயிகளின் 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ராஜஸ்தான் அரசு முயற்சிக்கிறது. எங்கள் நிலத்துக்கு அரசு வழங்கும் இழப்பீடு தொகை சந்தைவிலைக்கும் குறைவாக இருக்கிறது. இதை ஏற்கமாட்டோம். இதனால், கழுத்தளவுக்கு குழிவெட்டி அதில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.