அல்வாவுக்கும் பட்ஜெட்டுக்கும் என்ன சம்பந்தம்...? பின்னணி இதுதான்...!
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி தேதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து பிப்ரவரி முதல் தேதியில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் பிப்ரவரி முதல் தேதியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு 11 நாட்களுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் அல்வா செய்து அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தருவது வழக்கம். இந்த காரணத்தின் பின்னணி என்ன என்று இப்போது பார்ப்போம்.
சுதந்திரம் அடைந்த பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் குடியரசுத்தலைவர் மாளிகையில் அச்சடிக்கப்பட்டது. ஆனால் 1950 ஆண்டின் பட்ஜெட் முன்னதாகவே வெளியில் கசிந்தது.
இதனால் பட்ஜெட் அச்சடிக்கப்படும் இடம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 1980-ம் ஆண்டில் நார்த் ப்ளாக்கில் உள்ள அடித்தளத்தில் நிரந்தரமாக உருவாக்கப்பட்டது.
இதைதொடர்ந்து பட்ஜெட் விவகாரம் வெளியில் கசியாமல் இருக்க அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் பணியை முடித்து விட்டு அங்கேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தொலைபேசி கூட வைத்திருக்க அனுமதி இல்லை. அங்கு ஒரே ஒரு அலைபேசி இருக்கும். அதுவும் தீவிர கண்காணிப்பில் இருக்கும். அதில் இன்கம்மிங் வசதி மட்டுமே உண்டு.
நிதி மந்திரிக்கு மட்டுமே எந்நேரத்திலும் உள்ளே செல்லும் அனுமதி உண்டு. நிதித்துறை செயலாளர்கள் கூட சிறப்பு பாஸ் பெற்றே உள்ளே செல்ல முடியும்.
இதனால் 11 நாட்களும் ஊழியர்கள் அங்கேயே தங்கி அங்கேயே இருக்கவேண்டும். யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் அங்கேயே ஒரு மருத்துவமனை இருக்குமாம்.
இந்நிலையில், உலகின் எவ்வித தொடர்பும் இல்லாமல் அவர்களை குஷி படுத்தவே மத்திய பட்ஜெட் தயாரிக்கும்முன்பு அல்வா செய்து தருவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.