சபாஷ்…இந்திய கடற்படை புதிய வரலாறு - முதல் விமான பெண் பைலட் சுபாங்கி சுவரூப்
இந்திய கடற்படையில் உள்ள விமானத்தை இயக்க முதல்முறையாக பெண் பைலட் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி சுவரூப் என்ற பெண் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்.
இவர் விரைவில் கடற்படை ரோந்து விமானத்தை இயக்கும் பிரிவில் சேர்வார்.
சுபாங்கி தவிர்த்து புதுடெல்லியைச் சேர்ந்த அஸ்தா சேகல், புதுச்சேரியைச் சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவைச் சேர்ந்த சக்தி மாயா ஆகியோரும் கடற்படையில் இணைந்து புதிய வரலாறு படைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் கடற்படையில் பணியாற்றும் முதல் பெண் அதிகாரிகள் ஆவர்.
இந்த 3 பெண் அதிகாரிகளும் எழில்மலா கடற்படை அகாடெமியில் 20 மாதங்கள் பயிற்சி முடித்தபின் இந்த பணிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களின் பயிற்சி நேற்று முன்தினம் முடிந்ததையடுத்து, கடற்படை தளபதி சுனில் லம்பாவைப் பார்த்து வாழ்த்துப் பெற்றனர்.
கடற்படையில் விமானப் பைலட்டாக இருக்கும் சுபாங்கி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை கடற்படை அதிகாரியாக இருக்கிறார். சிறுவயதில் இருந்தே சுபாங்கிக்கு கடற்படையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது.
கடற்படைக்கு உட்பட்ட விமானங்களை இயக்கும் பைலட்களில் முதல் பெண் பைலட் எனும் பெருமையை சுபாங்கி பெற்றுள்ளார். கடற்படையில் விமானப்போக்குவரத்து சீர் செய்தல், விமானங்களை கண்காணித்தல் ஆகிய பிரிவில் பெண் அதிகாரிகள் பணியாற்றி வந்தாலும், விமானத்தை இயக்குவதில் முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.