வெளிநாட்டு வங்கி கணக்குகளை ரத்து செய்தார் கார்த்தி சிதம்பரம் - உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றச்சாட்டு
வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை கார்த்தி சிதம்பரம் மூடியதாக உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றம் சாட்டி உள்ளது.
அன்னிய முதலீடு
கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தின் மூலம் ரூ 305 கோடியை அந்நிய முதலீடாக பெறுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை பெற்றதில் நடந்த முறைகேடுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ எம் கன்வில்கர் மற்றும் டி ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
சீலிட்ட கவரில்
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. தரப்பு வக்கீல் கூறும்போது, ‘‘விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும் சில தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்ப்பதாக’’ தெரிவித்தார்.
இந்த விசாரணை தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் கபில் சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
வங்கிகணக்குகள் மூடல்
அதற்குப் பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் துஷார் மேத்தா, வெளிநாட்டில் அவர் (கார்த்தி) என்ன செய்தார் என்பது குறித்தும் அந்த கவரில் இடம் பெற்று இருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-
‘‘விசாரணையின்போது வெளிநாட்டில் தனக்கு ஒரே ஒரு வங்கிக்கணக்கு மட்டுமே இருந்ததாக கார்த்தி கூறி இருந்தார். ஆனால், அவர் வெளிநாடு சென்று இருந்தபோது பல வங்கிக்கணக்குகளை மூடிவிட்டார்.
நோட்டீஸ் ஏன்?
அவருக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கும் என்பதால், அது குறித்து நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு எற்பட்டு உள்ளது. வெளிநாட்டு வங்கிக்கணக்குகளை அவர் மூடியதால்தான், வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக அவருக்கு எதிராக கண்காணிக்கப்படும் நபர் என்ற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது’’.
இவ்வாறு அவர் கூறினார்.
மறுப்பு
இந்த குற்றச்சாட்டை கபில் சிபல் மறுத்தார். அவர் கூறியதாவது-
‘‘வங்கி கணக்கு பற்றியோ அல்லது சொத்துகள் குறித்தோ ஒரு கேள்வியாவது நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? கார்த்தியிடம் விசாரணை நடந்தபோது இது குறித்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை.
ஒரு வங்கிக்கணக்கு ெதாடர்பாகவாவது கார்ததியின் கையெழுத்தை அவர்கள் காட்ட முடியுமா? அப்படி காட்டினால் அன்னிய செலாவணி சட்டத்தின்படியோ அல்லது கருப்பு பண சட்டத்தின்படியோ அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்’’.
இவ்வாறு கபில் சிபல் கூறினார்.