“பாவம் செய்தவர்களுக்குதான் புற்றுநோய் வருகிறது” - பா.ஜனதா அமைச்சர் சர்ச்சைப் பேச்சு
கடந்த காலங்களில் செய்த பாவத்தின்பலனாக புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் சிலருக்கு வருகிறது என்று அசாம் மாநில சுகாதார, கல்வி மற்றும் நிதி அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக சர்பானந்த சோனாவில் இருக்கிறார்.அவரின் அமைச்சர் அவையில், சுகாதார, கல்வி மற்றும் நிதி அமைச்சரார இருப்பவர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா. கவுகாத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது-
கண்ணுக்கு புலப்படாமல் செய்த பாவங்களுக்கு எதிராக எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. ஒருவருக்கு இளம் வயதிலேயே புற்றுநோய் வருவது?, ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவது ஆகியவை எல்லாம் வியப்புக்கு உரியதுதான். ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பின்புலத்தைப் பார்க்கும் பொழுது, ஒரு புனிதமான நீதி இருக்கும் வேறு ஒன்றும் இல்லை.
இந்துமதம் என்பது கர்மா விதியில் நம்பிக்கை கொண்டது. கடந்தகால வாழ்க்கையில் நாம் செய்த பாவங்களின் பலனாகவே நாம் பாதிக்கப்படுகிறோம். கடந்த காலத்தில் செய்த பாவத்தின் காரணமாகவே புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் சிலருக்கு வருகின்றன.
ஆசிரியர்கள் மிகவும் கடுமையாக, கவனமாக பணியாற்ற வேண்டும். சிலர் கடினமாக உழைத்தும், அவர்கள் தனியார் பள்ளிகளில், குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். அதேசமயம், அதே ஆசிரியர்கள்தான் அரசு பணியைப் பெற்று உயர்ந்த ஊதியத்தில் இருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் ஒரு புனிதமான நீதி செயல்படுகிறது. இந்த புனித நீதி மூலமே ஒருவருக்கு பலன் கிடைக்கிறது. இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
கடந்த காலத்தில், நிகழ்காலத்தில் சில பாவங்களை செய்து இருக்கலாம், பாதிக்கப்பட்ட நபர் செய்யாமல் இருந்தால்கூட அவரின் பெற்றோர் செய்திருக்கலாம். அந்த நபரின் தந்தை பாவம் செய்தால் கூட அங்கும் அந்த புனித நீதி செயல்பட்டு தண்டனையை வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தீபாபிராதா சைக்கா கூறுகையில், “ அமைச்சர் புற்றுநோய் குறித்து கூறிய கருத்து, துரதிருஷ்டவசமானது. அது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை வேதனைப்படுத்துவதாகும். இதற்கு அவர் பொதுப்படையாக மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவித்தார்.