Asianet News TamilAsianet News Tamil

உலகின் மிகப்பெரிய “டைனிங் ஹாலில்” டிரம்ப் மகளுக்கு விருந்து அளிக்கிறார் பிரதமர் மோடி

Prime Minister Narendra Modi is at the worlds largest dining hall
Prime Minister Narendra Modi is at the worlds largest dining hall
Author
First Published Nov 22, 2017, 10:04 PM IST


ஐதராபாத்துக்கு உலக தொழில்முனைவோர்கள் மாநாட்டுக்கு வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்புக்கு, உலகின் மிகப்பெரிய “டைனிங் ஹாலில்” பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார்.

இந்த டைனிங் ஹால் ஐதராபாத்தில் உள்ள தாஜ் பலாக்நுமா 5 நட்சத்திர ஓட்டலில்(அரண்மனை) அமைந்துள்ளது.

ஐதராபாதில் வரும் 28-ந்தேதி உலக தொழில்முனைவோர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்துகின்றன.

இதில் 150 நாடுகளில் இருந்து, 1500 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் அமெரிக்காவில் இருந்து அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் தலைமையில் குழு வருகிறது. இந்த மாநாடு தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில்,  150 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்க ஐதராபாத் விழாக்கோலம் பூண்டு வருகிறது.

சாலைகள் அனைத்தும் செப்பணிடப்பட்டு, குண்டும் குழி நீக்கப்பட்டு புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன, 200க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் ஆசிரமங்களுக்கு அனுப்பப்பட்டு பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த தொழில்முனைவோர் மாநாடு, 35 ஏக்கர் பரப்பரளவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்திலும், ஐதராபாத் சர்வதேச வர்த்தக மையத்திலும் நடக்க உள்ளது. இந்த இரு மையங்களையும் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாநாடு நடக்கும் இடங்களுக்கு யாரும் அனுமதியில்லாமல் செல்லக்கூடாது என்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நுழைவாயிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

28ந்தேதி தொடங்கும் தொழில்முனைவோர்கள் மாநாட்டில் முதல் நாளில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.  அடுத்த நாள் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் பேசுகிறார்.

அதன்பின் ஐதராபாத்தில் உள்ள தாஜ் பலாக்னுமா அரண்மனை ஓட்டலில் உலகின் மிகப்பெரிய டைனிங் ஹாலில் பிரதமர் மோடி, இவாங்கா டிரம்புக்கு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்.

இது தவிர மாநில முதல் சந்திரசேகர் ராவ், ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் தனியாக விருந்து அளிக்க இருக்கிறார். இந்த விருந்தில் பிரதமர் மோடி, இவாங்கா டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாடுக்கு மட்டும் தெலங்கானா அரசு சார்பில் ரூ.8 கோடி செலவு செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios