சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை !! மத்திய அரசு அதிரடி !!
நாடு முழுவதிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு, இலவச அனுமதி வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.
இந்தியா முழுவதும், ஒரு லட்சம் கிலோமீட்டருக்கு மேல், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இச்சாலைகளின் வழியாக செல்லும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிக்க, 400க்கும் மேற்பட்ட இடங்களில், சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில், 46 இடங்களில், சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றின் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி, சாலை விரிவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, சுங்கச் சாவடிகளை அகற்றப் போவதாக, பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பின், அது, கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல், அடுத்தாண்டு நடக்க உள்ளதால், அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக, சுங்கச் சாவடிகளில், உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சில சுங்கச் சாவடிகளை, சாலை விரிவாக்கம் மற்றும் கட்டண வசூலிப்பு அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிப்பதற்கு, இந்நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
எனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அந்தந்த மாநில தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம், அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில், இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் வாய்ப்புள்ளது.