தேர்தல் முடிந்தது... நமோ டி.வி.யும் முடிவுக்கு வந்தது... தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்திய பாஜக!
இந்தத் தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் நரேந்திர மோடியின் பேச்சுகள் ஒளிபரப்பாயின. தேர்தல் விதிமுறைகளை மீறும் வண்ணம் இந்தத் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு மோடியின் பிரசாரங்கள் ஒளிபரப்புவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் முடிந்த கையோடு பாஜகவின் ‘நமோ’ டி.வி.யும் ஒளிப்பரப்பை நிறுத்திக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பாஜக பல்வேறு உத்திகளைக் கையாண்டது. அதில் ஒன்றாக, மோடியின் பிரசாரத்தை 24 மணி நேரமும் ஒளிபரப்பும் வகையில் தொலைக்காட்சி ஒன்றை தொடங்குவதும் ஒன்றாக இருந்தது. இதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை லோகோவாகக் கொண்ட நமோ டிவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கியது.
இந்தத் தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் நரேந்திர மோடியின் பேச்சுகள் ஒளிபரப்பாயின. தேர்தல் விதிமுறைகளை மீறும் வண்ணம் இந்தத் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு மோடியின் பிரசாரங்கள் ஒளிபரப்புவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தன. இதுதொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக பாஜகவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனாலும் நமோ டி.வி. சார்பில் மோடியின் பிரசாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுவந்தன. இந்நிலையில் இறுதிக்கட்டத் தேர்தலுக்கு பிரசாரம் மே 17 உடன் முடிவுக்கு வந்தது. அன்றைய தினத்துடன் நமோ டி.வி.யில் மோடியின் பிரசார ஒளிப்பரப்பும் முடிவுக்கு வந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாஜக தரப்பில் கூறும்போது, “தேர்தல் பிரசாரத்துக்காகவே நமோ தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் முடிந்ததுடன் அதன் ஒளிப்பரப்பும் நிறுத்தப்பட்டுவிட்டது. இனி அந்த டி.வி. தேவைப்படாது” என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் பாஜகவிடம் சரணடைந்துவிட்டது என்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதில், நமோ டி.வி. தொடர்பாகவும் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.