‘குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு’ - பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருக்கிறது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் சந்தித்தது குறித்து அந்த கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
2-ம் கட்ட வாக்குப்பதிவு
குஜராத்தில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 9 ந்தேதி 89 தொகுதிகளுக்கு நடந்தது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு 14ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், பலன்பூர் தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது-
ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசியுள்ளனர். ஊடகங்களில் வந்த நேற்று முன்தினம் செய்தியின்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் இல்லத்தில் பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த கூட்டம் 3 மணிநேரம் நடந்துள்ளது.
சாதாரன விஷயமல்ல
இந்த கூட்டம் நடந்து முடிந்த அடுத்த நாள் என்னை ‘இழிவானவன்’ என மணி சங்கர் அய்யர் சாடினார். இது சாதாரண விஷயம் இல்லை. பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தளபதி சர்தார் அர்சத் ராபிக், குஜராத் மாநிலத்தில் முதல்வராக காங்கிரஸ் தலைவர் அகமது படேல் வர வேண்டும் எனவிருப்பம் தெரிவித்துள்ளார்.
சந்தேகம் வரவில்லையா?
ஒரு புறம், பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தளபதி சர்தார் அர்சத் ராபிக் குஜராத் சட்டசபைத் தேர்தலில் தலையிடுகிறார், மற்றொருபுறம், மணி சங்கர் அய்யர் இல்லத்தில் பாகிஸ்தான் முக்கியத் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த கூட்டத்துக்கு பின், குஜராத் மக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், ஏழைமக்களும், மோடியும் அவமானப்படுத்தப்பட்டனர். இந்த விவகாரங்கள் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா?. இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கத்தை காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.