பட்ஜெட்டில் நான் தலையிட மாட்டேன்! ஆனா இப்படித்தான் இருக்கும்! சூசகம் பாடும் மோடி!
2018-2019 ஆம் நிதியாண்டு பட்ஜெட் நாட்டு மக்களின் நலன் கருதியதாக இருக்கும் என்றும், மக்களைக் கவரும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு மிக சிறந்த இடம் கிடைத்துள்ளது என்றார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
ரூபாய் நோட்டு வாபஸ், சரக்கு - சேவை வரி அமல் ஆகியவை அரசின் வெற்றிக்கு உதாரணங்களாக கூறிய அவர், நாட்டில் வேலையின்மை நிலவுவதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.
விவசாயிகளுக்கு பிரச்சனை இருப்பது உண்மைதான். மாநில அரசுகளுடன் இணைந்து அதனைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மோடி கூறினார்.
இலவசங்களையும், சலுகைகளையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், மக்கள் நேர்மையான ஆட்சியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றார். தற்போது மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் தயாரித்து வருகிறார். அதில் என் தலையீடு எதுவும் இல்லை. பட்ஜெட் நாட்டு நலன் கருதியதாக இருக்குமே தவிர, மக்களைக் கவரும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்காது என்றும் மோடி கூறினார்.