லாலு பிரசாத்துக்கும், மகன் தேஜஸ்விக்கும் சி.பி.ஐ. மீண்டும் சம்மன்...!
ரெயில்வே துறையின் ஓட்டலை ஒப்பந்தத்திற்கு விட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது தொடர்பான வழக்கில் வருகிற 25, 26 தேதிகளில் நேரில் ஆஜராகுமாறு லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு சி.பி.ஐ. மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது.
ராஞ்சி மற்றும் பூரியில் ரெயில்வே துறை ஓட்டல்களை சுஜாதா ஓட்டல் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்திற்கு விட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
நேரில் ஆஜராகவேண்டும்
இது தொடர்பாக வருகிற 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு லாலு பிரசாத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இதே வழக்கில் அவரது மகன் தேஜஸ்வி யாதவை வருகிற 26-ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் சி,.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
11, 12 தேதிகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ. ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களை கூறி இருவரும் ஆஜராகவில்லை.
இதனையடுத்து வருகிற 25, 26 தேதிகளில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. இப்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
லாலு பிரசாத் மத்திய ரெயில்வே துறை அமைச்சராக இருந்தபோது அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரெயில்வே ஓட்டல்களை பினாமி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த வழக்கில் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.