குவைத்தில் மரண தண்டனையில் இருந்து “தமிழரை காப்பாற்றிய கேரள அரசியல்வாதி”
குவைத் நாட்டில் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று மரணத்தின் பிடியில் இருந்த தமிழரை கேரள அரசியல்வாதி ஒருவர் காப்பாற்றியுள்ளார். அவர் அளித்த இழப்பீடு தொகை மூலம் தமிழர் உள்பட இரு குடும்பங்கள் காப்பாற்றப்பட்டன.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் தலைவர் சயத் முகமதாலி சிஹாப் தங்கலின் இளைய மகன் சயத் முன்னாவராலி சிஹாப் தங்கள், ரூ.30 லட்சத்தை அளித்து தமிழர் உள்பட இரு குடும்பத்தை காப்பாற்றினார்.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன்அதிமுத்து(வயது45). இவர் குவைத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் வாஜித். இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே பிரிவில் பணியாற்றினார்கள்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட தகராறு, சண்டையாக மாறியது. இதில் தமிழர் அர்ஜூனன் அதிமுத்து தாக்கியதில், அப்துல் வாஜித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 2013ம் ஆண்டு நடந்தது.
இதையடுத்து, கொலையாளி அர்ஜூனனை கைது செய்த குவைத் போலீசார், வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கொலைசெய்த அர்ஜூனனுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.
அதேசமயம், பாதிக்கப்பட்ட அப்துல் வாஜீத் கேட்கும் இழப்பீட்டு தொகையைக் கொடுத்து, அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து மன்னிப்புபெற்றால், தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கொலையான கேரளாவைச் சேர்ந்த அப்துல் வாஜித் குடும்பத்தினர் தங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடாக வேண்டும் எனக் கேட்டனர். இந்த தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுக்காவிட்டால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால், தமிழர் அர்ஜூனன் குடும்பத்தாரும் அந்த அளவு பணம் கொடுக்கமுடியாத ஏழ்மையாக குடும்பமாகும். இருப்பினும் அர்ஜூனன் உயிரைக்காக்க முடிந்த அளவு பணத்துக்கு முயற்சித்தனர் ஆனால்முடியவில்லை.
பாதிக்கப்பட்ட அப்துல் வாஜித் குடும்பத்தாரும் வசதியின்றி இருந்ததால், இந்த தொைக கிடைத்தால், தங்களின் எதிர்காலத்துக்கு உதவும் என்று இருந்தனர். இதனால், நெருக்கடியான சூழல் நிலவி, உயிரா? பணமா? என்ற கட்டத்துக்கு சென்றது.
இதையடுத்து, தங்களால் ரூ.30 லட்சத்தை திரட்டமுடியாத சூழலை உணர்ந்த அர்ஜூனன் மனைவி மாலதி, மலப்புரம் மாவட்டம், பணகாட்டில் உள்ள கொடப்பனக்கல் சயத் சாஹிப் குடும்பத்தாரை அனுகினார். தங்கள் நிலையை அவர்களிடம் தெரிவித்த மாலதி , தனது கணவரை உயிரோடு மீட்க கோரி கண்ணீர் விட்டார்.
இதைக் கேட்டு நெகிழ்ந்த, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் தலைவர் சயத் முகமதாலி சிஹாப் தங்கலின் இளைய மகன் சயத் முன்னாவராலி சிஹாப் ரூ. 30 லட்சத்தை தான் தருவதாக ஒப்புக்கொண்டார். அடுத்த சில மணி நேரங்களில் அந்த பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.
பாதிக்கப்பட்ட அப்துல் வாஜித்தின் குடும்பத்தாரும் தங்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டது குறித்த தகவலை குவைத் அரசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், தமிழர் ஒருவரின் உயிர் கடைசி நேரத்தில் கேரள அரசியல்வாதி ஒருவரால் காப்பற்றப்பட்டது.
இது குறித்து சயத் முன்னாவராலி சிஹாப் கூறுகையில், “ இந்த ரூ.30 லட்சம் பணம் மூலம் தமிழர் அர்ஜூனனும் அவரின் குடும்பமும் காப்பாற்றப்பட்டது, 30 லட்சம் கிடைப்பதன் மூலம், கொலைசெய்யப்பட்ட அப்துல்வாஜித்தின் குடும்பத்துக்கும் அடுத்த மறுவாழ்வு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இரு குடும்பம் காப்பற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.