மக்களிடம் பணப் புழக்கம் ஏன் குறைஞ்சு போச்சு?: நிதி ஆயோக் துணைத் தலைவர் சொல்லுறத கேளுங்க...!
வரும் 2018-19ஆம் நிதியாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் என உயரும் என்று கூறியுள்ளார் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஞாயிற்றுக்கிழமை நேற்று ராஜீவ் குமார் குறிப்பிட்ட போது... கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தேவையற்ற விதத்தில் அதிக அளவில் கடன்களை அள்ளி அள்ளிக் கொடுத்து வந்தார்கள். வங்கிகள் கூவிக் கூவி அழைத்து பெருமளவில் கடன்களைக் கொடுத்தன. அதனால் அப்போது பொதுமக்களிடம் பெருமளவில் பணப் புழக்கம் இருந்தது. அதனால் பெரும் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்ற தங்களின் தவறான கணிப்பினால், வங்கிகள் அவ்வாறு கடன்களை அதிக அளவில் அள்ளிக் கொடுத்தன. தனியார் நிறுவனங்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்பாடுகள் இன்றி கடன்கள் அளிக்கப்பட்டன.
ஆனால், இந்தப் போக்கு அடுத்த சில ஆண்டுகளில் தேக்க நிலையை அடைந்தன. அதற்குக் காரணம் வங்கிகளில் வாராக் கடன்கள் அதிகரித்தது என்பதுதான். வங்கிகள் கொடுத்த கடன்கள் எல்லாம், வாராக்கடன்கள் பட்டியலில் சேர்ந்து கொண்டே போனதால், வங்கிகள் ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்தன. இதனால், 2013ஆம் ஆண்டில், பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அந்த வகையில் சொல்லப் போனால் 2007 முதல் 2013 வரை பொருளாதார நிலை சிறப்பாக இருந்தது என்று சொல்லலாம்.
இதனால் 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மந்த கதியிலிருந்த பொருளாதார நிலை கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மீண்டு வரத் தொடங்கியிருக்கிறது. 2016-17ஆம் நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம், 2018-19ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று சொல்லலாம்.
கடந்த நிதியாண்டில் டிமானிடைசேஷன் என்ற ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கையின் மூலம் 87 சதவீத ரொக்கப் பணம் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதனால் ஒரு பின்னடைவு ஏற்பட்டது என்றாலும், இந்த நிதியாண்டின் அனைத்து காலாண்டிலும் வேளாண்மைத் துறை உற்பத்தி சிறப்பாக இருந்தது. அந்த வகையில், 2018-ன் முதல் காலாண்டின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நிச்சயம் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
எப்படியோ, கிரெடிட் கார்டு என்று கூவிக் கூவி வங்கிகள் கொடுக்க, அவற்றைக் கட்டுவதற்குள் விழி பிதுங்கி மொழி தடுமாறி அலைந்தவர்கள் ஏராளம். இப்போதும் கிரெடிட் கார்டு என்றால் விலகிச் செல்பவர்கள் அதிகம் பேர். ஆனால், இந்த வாராக் கடன் பட்டியலில் டாப் இடம் பிடித்த கிங் பிஷர் விஜய் மல்லையா போன்றவர்களாலும், அவர்களுக்கு கடன்களை அள்ளி அள்ளிக் கொடுத்து வங்கிகளை போண்டியாக்கிய ப.சிதம்பரம் போன்ற ‘ஆட்சி செய்த கனவான்’களும் நாட்டு மக்களுக்கு பதில் கூறக் கடமைப் பட்டவர்கள்தான்!