இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் ரூ. 12 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை - அறிவிப்பை வாரி வாரி வழங்கிய மத்திய அமைச்சர்...!
இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் திட்டங்கள் தொடர்பாக சென்னையில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான அறிக்கையை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் தொடர்பாக 81 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றும் சென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பறக்கும் சாலை அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிப்பதாகவும் விபத்து ஏற்படக்கூடிய 61 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க கோதாவரி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் மூவாயிரம் டிஎம்சி தண்ணீரை, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதின்கட்காரி தெரிவித்தார்.