போலி நிறுவனங்கள், இயக்குநர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை....10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் கிடைக்கும்.....
ரூபாய் நோட்டு தடை காலத்தில் கோடிக்கணக்கில் வங்கிகளில் கருப்பு பணத்தை டெபாசிட் செய்த போலி நிறுவனங்கள், அதன் இயக்குநர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி திருத்தப்பட்ட கம்பெனிச் சட்டத்தின்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கு வாய்ப்பு இருக்கிறது.
நாட்டில் கருப்பு பணம், ஊழல், கள்ள நோட்டுகளை ஒழிக்க புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இந்த நேரத்தில் தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளை போலி நிறுவனங்கள் மூலம் வங்கிகளில் சில பெரு நிறுவனங்களின் முதலாளிகள் டெபாசிட் செய்தனர்.
அதன்பின், தடைக் காலம் முடிந்தபின், மீண்டும் அந்தபணம் வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்டது. இதன்படி, 6 ஆயிரம் நிறுவனங்கள் மூலம் ரூ.4,600 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்ததை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தனர். ஒரே நிறுவனத்துக்கு மட்டும் 900 வங்கிக்கணக்குகள் வரை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய அரசின் கார்பரேட் விவகாரத்துளை சமீபத்தில் எடுத்த நடவடிக்கையில் 2 லட்சம் போலி நிறுவனங்கள் வருவாய் கணக்கை தாக்கல் செய்யாத காரணத்தால் அதன் பதிவை ரத்து செய்தது. மேலும், அந்த நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து வருமானவரித்துறையோடு இணைந்து விசாரிக்கவும் முடிவு செய்தது.
இதன்படி, திருத்தப்பட்ட கம்பெனிச் சட்டத்தின்படி, போலி நிறுவனங்கள், அதன் இயக்குநர்கள் மீது கம்பெனிச்சட்டம் 447 பிரிவின்கீழ் மோசடி, பொதுநலன் பாதுகாத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் போலி நிறுவனங்களை நடத்திய இயக்குநர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் கிடைக்க வாய்ப்பு உண்டு.