வரதட்சணையால் என்ன லாபம்?: அழகற்ற பெண்ணுக்கும் கல்யாணம் நடக்க அது உதவுகிறதாம்!
வரதட்சணையால் என்ன லாபம் இருக்கு சொல்லுங்க? அதை அடுக்கிக் கொண்டே போகிறது ஒரு பாடப் புத்தகம். அதுவும் கல்லூரியில் மாணவ மாணவிகள் படிக்கும் சமூகத் துறை பாடப் புத்தகம்தான் இந்தக் கருத்துகளைத் தாங்கியுள்ளது.
மாணவியர் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் பாடத்தைப் பற்றிய விவரத்தைப் பார்த்தால், படிப்பவருக்கே மனம் திக் என்று ஆகிவிடும். சனிக்கிழமை நடந்தது ஏழரையைக் கூட்டும் இந்த விஷயம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது செயிண்ட் ஜோசப் கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசியர் ஒருவர், கல்லூரிப் பாடப் புத்தகத்தின் சமூகவியல் துறைப் புத்தகத்தைப் படித்து ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டார். அதில் வரதட்சணை நடைமுறையைப் பாராட்டி வாசகங்கள் இடம் பெற்றிருந்தது என்பதை விட, பெண்களை மட்டமாகச் சித்திரித்தும் சில வாசகங்கள் இருந்தன என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.
அந்தப் புத்தகத்தில், வரதட்சணையால் விளையும் பயன்கள் என்று குறிப்பிடப்பட்ட ஒரு பக்கத்தில், வரதட்சணை ஒருவரின் அந்தஸ்தை உயர்த்தும் என்ற தலைப்புடன் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் இவை...
அழகில்லாத பெண்களைத் திருமணம் செய்ய ஆண்கள் விரும்புவதில்லை. எனவே, அழகில்லாத பெண்கள் மீது ஆண்களுக்குக் கவர்ச்சி பெருகி திருமணம் நடக்க, அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைவர் கிடைக்க வரதட்சணையே உதவுகிறது.
குடும்ப நடைமுறையில், ஒரு பெண்ணின் கௌரவத்தை வரதட்சணையே அக்குடும்பத்துக்குள் உயர்த்துகிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆண், வரதட்சணை மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மேல் படிப்பைத் தொடர முடியும். சொத்தில் ஒரு பகுதியைக் கொடுப்பதை விட, வரதட்சணையாக சிறிதளவு பணம் கொடுப்பதே சரி என்றெல்லாம் அந்தப் பாடப் புத்தகத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தப் பக்கத்தை மற்ற மாணவர்கள் அப்படி ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லைதான். ஆனால், வேலூரைச் சேர்ந்த ஒரு பொறியியல் மாணவி இதை லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது பேஸ்புக்கில் இந்தப் பக்கத்தை எடுத்து பதிவிட்டார். அது பலரின் கவனத்தைப் பெற்று வைரலானது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் செரியன் அலெக்சாண்டர், இந்தப் புத்தகத்தின் டிஸ்க்ளெய்மரில் புத்தகத்தின் ஆசிரியர் இது ஒரு சமூகத்தில் நிலவும் பழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். அதை நாம் கேள்வி கேட்க முடியாது. இந்தப் பக்கத்தைப் பகிர்ந்த அதிமேதாவி சிட்டிஸன் ஜர்னலிஸ்ட்டான அந்தப் பெண், இது ஏதோ கல்லூரின் ஐடியாலஜி என்றவாறு பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார் என்று கூறினார்.
எப்படியோ... இது இப்போது விவாதத்துக்குரிய பொருளாகிவிட்டது.