இனி, டிஜிட்டல் பரிமாற்றம் கட்டாயம்…அனைத்து பல்கலைக்கும் மத்திய அரசு உத்தரவு
அனைத்து மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் டிசம்பர் மாதம் முதல் டிஜிட்டல் பரிமாற்றத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் எனத் தெரிகிறது.
இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், மாநிலங்களில் உள்ள பல்கலைகள் ஆகியவற்றில் டிஜிட்டல் பரிமாற்றத்தை கட்டாயமாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவு வரும் டிசம்பர் மாதத்தில் இருந்தே கூட நடைமுறைக்கு வரலாம். பல்கலை வளாகத்துக்குள் ரொக்கப்பணத்தை யாரும் கையாளக்கூடாது, டிஜிட்டல் பரிமாற்றம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். இதற்காக பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.), அனைத்து இந்திய தொழிற்கல்வி குழு(ஏ.ஐ.சி.டி.இ.) ஆகியோரிடமும் ஒத்துழைப்பை கேட்டுள்ளோம்” என்றார்.
இந்த நடவடிக்கை மூலம், தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஆகியவற்றில் முழுமையாக டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டுவரப்படும். மாணவர் சேர்க்கை விண்ணப்பம், மாணவர் சேர்க்கை கட்டணம், மதிப்பீடு, தேர்வு முடிவுகள்வெளியீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல் முறையாக்கப்படும்.
மேலும், பல்கலைக்கழகங்களில் செயல்படும் கேண்டீகளில் கூட ரொக்கப்பணத்தை கையாளாமல் “பிம்” செயலி மூலம் பரிமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.