50வயதுள்ள மணமகன் தேவை: தாய்க்கு மாப்பிள்ளை தேடி மகள் அளித்த விளம்பரத்தால் ட்விட்டரில் குவியும் பாராட்டு
மகளுக்கு மாப்பிள்ளை தேடும் தாயைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தனது தாய்க்கு 50 வயதுள்ள மாப்பிள்ளை தேவை என்று மகள் ட்விட்டரில் வெளியிட்ட விளம்பரம்தான் ஏராளமான பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்தியாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவிஆஸ்தா வர்மா. இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கடந்த வியாழக்கிழமை தன் தாயுடன் எடுத்த செல்ஃபியை பதிவிட்டார். அந்த பதிவில் தனது தாயை திருமணம் செய்துகொள்ள அழகான 50 வயதான நபர் தேவை என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மணமகன் சைவ உணவு உண்பவராகவும், மது பழக்கம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என, அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தன் தாய்க்கு மணமகன் தேடும் ஆஸ்தா வர்மாவை சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். அவரை, "பாசமான, கனிவான மகள்” என்று பாராட்டும் நெட்டிசன்கள், அவர் விரும்புவது போன்றே அவரின் தாய்க்கு ஏற்ற மணமகன் கிடைப்பார் என வாழ்த்தி வருகின்றனர்.
இந்த பதிவை இன்று (நவ.2) மதியம் வரை, 28,000-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.