அயோத்தி வழக்கு... இறுதி விவாதத்தின் போது இந்து அமைப்பின் புத்தகம் கிழிப்பு... உச்சநீதிமன்றத்தில் பதற்றம்..!
அயோத்தி வழக்கின் இறுதி விசாரணையின் போது இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை எதிர் தரப்பு வழக்கறிஞர் கிழித்தெறிந்த சம்பவம் உச்சநீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அயோத்தி வழக்கின் இறுதி விசாரணையின் போது இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை எதிர் தரப்பு வழக்கறிஞர் கிழித்தெறிந்த சம்பவம் உச்சநீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேசம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ். கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்பினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பிரித்து எடுத்துக்கொள்ளும்படி 2010-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், அதனை 3 அமைப்புகளுமே ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அயோத்தி விவகாரம் தொடர்பாக மொத்தம் 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மத்தியஸ்தம் வாயிலாக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் மத்தியஸ்தம் முயற்சி தோல்வியில்தான் முடிவடைந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீவிரம் காட்டியது.
இந்த வழக்கு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று வரை தொடர்ந்து 39 நாட்களாக அயோத்தி வழக்கு விசாரணை விசாரிக்கப்பட்டது. தொடர்ந்து 40-வது நாளாக இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. இன்று மாலை 5 மணியுடன் இந்த விசாரணை நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று இறுதி விசாரணை என்பதால் உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, இந்து அமைப்புகள் தரப்பில் வாதங்கள் முடிந்து புத்தகங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சன்னி வக்பு வாரிய சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் கோபமடைந்து தலைமை நீதிபதி முன்பு இந்த புத்தகத்தை கிழித்தெறிந்தார். இந்த சம்பவத்தால் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.