இறந்து கண்களில் ஈ மொய்த்த நிலையிலும் சிகிச்சைக்கு வராத மருத்துவர்கள்.. அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு நிகழ்ந்த அவலம்..!
அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவர்கள் யாரும் சிகிச்சை அளிக்க வராத நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சிவ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசந்திர லோடி. வயது 70. இவர் காச நோயால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக மிகவும் உடல்நலம் பாதிக்கப்படவே நேற்று காலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். அங்கு 5 நேரத்திற்கு மேலாக மருத்துவர்கள் யாரும் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லோடி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இதுதொடர்பாக மருத்துவமனையில் இருந்தவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ஆனாலும் மருத்துவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள். இதனால் இறந்து போன லோடியின் கண்களில் எறும்பு மொய்க்க தொடங்கியிருக்கிறது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " சிவ்பூர் மருத்துவமனையில் இறந்து போனவரின் கண்களில் ஈ மொய்த்தது வருந்தத்தக்க நிகழ்வு. இதுபோன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக நடக்க கூடாது. இது மனிதநேயத்திற்கு ஏற்பட்டுள்ள கலங்கம். நான் ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த சம்பவத்தில் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.