முன்னணி ஐ.டி.நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு ! 7000 பணியாளர்களை நீக்க திட்டம் !!
முன்னணி ஐ.டி நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், தனது ஊழியர்களில் 7,000 பேரை வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.டி.நிறுவனர் காக்னிசன்ட் .2 லட்சம் பேர் வரை இந்த நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கன நடவடிக்கையின்மூலம் வருமானத்தை உயர்த்த திட்டமட்டுள்ள இந்த நிறுவனம் அங்கு பணியாற்றும் நடுத்தர மற்றும் சீனியர் பிரிவைச் சேர்ந்த 10,000 முதல் 12,000 பணியாளர்கள் வரை, தற்போதுள்ள பணிப் பொறுப்பிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இவர்களில் 5,000 பணியாளர்களை மட்டும் திறன் மேம்பாடு செய்து, அந்நிறுவனத்தின் வெவ்வேறு பணியிடங்களுக்கு மாற்றிப் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள 5,000 முதல் 7,000 வரையிலான பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள் என கூறப்படுகிறது.
மேலும், காக்னிசன்ட் நிறுவனம் சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சில பணிகளைச் செய்துகொடுக்கிறது. அந்தப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, 2020 முதல் சில பிசினஸ்களைக் குறைத்துக்கொள்ளவும் காக்னிசன்ட் முடிவெடுத்துள்ளது.
இதனால் அதில் பணியாற்றிவரும் 6,000 பணியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தப் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதற்காக, காக்னிசன்ட் நிறுவனத்தோடு தொடர்புடைய மற்ற நிறுவனங்களில் இவர்களைப் பணியமர்த்த முடிவெடுத்துள்ளனர். எனவே, இந்த வகையில் கூடுதலாக 6,000 பேர் வரை பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன..