20 உயர் நீதிமன்றங்களில் 6 லட்சம் வழக்குகள் தேக்கம்..!
நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் கடந்த 10 வருடங்களாக சுமார் 6 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்படாமல் கிடப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்குவதில் பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகி வருகிறது.
40 லட்சம் வழக்கு தேக்கம்
இந்நிலையில்,கடந்த 2016-ம் ஆண்டு வரை நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 40.15 லட்சம் வழக்குகள் தேங்கிக்கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் 20 உயர்நீதிமன்றங்களில் சுமார் 6 லட்சம் வழக்குகள் கடந்த 10 வருடங்களில் மட்டும் தேங்கிக்கிடப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் அதிகம்
இவற்றில் மிக அதிகப்படியாக மும்பை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 1,29,063 வழக்குகள் தேங்கியுள்ளன. இவற்றில் 96,596 வழக்குகள் சிவில் வழக்குகள் ஆகும்.
12,846 வழக்குகள் கிரிமினல் வழக்குகள் ஆகும்.
அடுத்துபடியாக பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றங்களில் அதிக அளவில் வழக்குகள்தேங்கிக்கிடக்கின்றன.
கொல்கத்தா
இதனைத் தொடர்ந்து, கடந்த சில வருடங்களாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 74,315 வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.
அவற்றில் 40,529 வழக்குகள் சிவில் வழக்குகள் ஆகும். 14,898 வழக்குகள் கிரிமினல் வழக்குகள் ஆகும்.