ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தை இவங்கெல்லாம் சாப்பிடவே கூடாது...
வெந்தயம்
உலக உயிர்கள் உய்வதற்கென்று இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. கீரை இனத்தைச் சார்ந்த வெந்தயம், மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும் உண்டோர்க்கு சுகம் தரும் நல்மருந்தாகவும் விளங்குகிறது.
ஆங்கிலப் பெயர்
சிறிது கசப்பு, கார்ப்பு, குளிர்ச்சி ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ள வெந்தயத்தினுடைய தாவரப் பெயர் Trigonella foenum-graecum என்பதாகும். இதனுடைய ஆங்கிலப் பெயர் Fenugreek என்பதாகும்.
தன்மை
வெந்தயக் கீரை குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது, மலத்தை இளக்குந்தன்மை உடையது, சிறுநீரைப் பெருக்குந்தன்மை வாய்ந்தது, உள்ளார்ந்த வீக்கத்தையும், உஷ்ணத்தையும் போக்கக்கூடியது,
வறட்சித் தன்மையை அகற்றக்கூடியது, காம உணர்வைப் பெருக்கக்கூடியது, அகட்டு வாய்வு அகற்றி, டானிக் போல உடலுக்கு உரமாவது.
வெந்தய விதைகள்
வெந்தயத்தின் விதைகள் பசியின்மையையும், வயிற்று உப்புசத்தையும் போக்கவல்லது, பித்தத்தைச் சமன்படுத்தக்கூடியது, வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப்போக்கையும் போக்கக்கூடியது, சீதபேதியை நிறுத்தவல்லது.
கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் கண்டவிடத்து அந்த வீக்கத்தைத் தணிக்கவல்லது, தாய்ப்பாலைச் சுரக்கச் செய்வது.
ரத்த ஓட்டத்தைத் தூண்டக்கூடியது
குழந்தை பெற்ற இளந்தாய்மார்களுக்கு ஊட்டம் தரும் வகையில் டானிக்காகவும் அமைகிறது.’வெந்தயம் ரத்த ஓட்டத்தைத் தூண்டக்கூடியது, சீழ் பிடிப்பதைத் தடுக்கக்கூடியது’
இவ்வளவு நற்குணங்களைக் கொண்ட வெந்தயத்தை யார் யார் தவிர்ப்பது நல்லது?
* கருவுற்ற பெண்கள்
கருவுற்ற பெண்கள் அதிக அளவில் வெந்தயத்தை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அது ஊறு ஏற்படுத்தலாம்.
* நோயாளிகள்
வயிற்றில் புண்கள், ரத்த ஒழுக்கு போன்றவை இருப்பின் அந்த ரத்தக்கசிவை அது அதிகப்படுத்தக்கூடும் என்பதால் இவ்வித நோயாளிகளும் வெந்தயத்தை அளவோடு பயன்படுத்துதல் நலம்.
* நெஞ்சுவலி
யாரேனும் சிலருக்கு தோலில்எரிச்சல், நமைச்சல், நெஞ்சுவலி, முகவீக்கம், மூச்சு முட்டல், விழுங்குவதற்குச் சிரமம் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு.
சிலருக்கு பேதி, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, சிறுநீரில் நாற்றம் ஆகியவை ஏற்படலாம்.