16 வயது பள்ளி மாணவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொன்ற வாலிபர்..! திருமணம் செய்ய மறுத்ததால் வெறிச்செயல்..!
மதுரை அருகே திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது ஓணாம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு சந்தியா(16) என்கிற மகள் இருந்துள்ளார். இவர் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்திருக்கிறார். பால்பாண்டி குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வருகிறார்.
ஓணாம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பால்பாண்டி தனது மனைவி மற்றும் மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். திருவிழா முடிந்ததும் சந்தியா மட்டும் தனது பாட்டியுடன் தங்கி இருக்கிறார். பால்பாண்டியும் அவரது மனைவியும் மதுரை திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் பாட்டி வீட்டில் இருந்து தோட்டத்திற்கு குளிக்க சென்ற சந்தியா மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் சந்தியாவை தேடியுள்ளனர். அப்போது தோட்டத்தின் அருகே இருக்கும் ஒரு குன்று பகுதியில் சந்தியா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அவரது பாட்டியும் உறவினர்களும் கதறி துடித்துள்ளனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பின்னர் கொலை நடந்த பகுதியின் அருகே இருப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அம்மாவாசி மகன் மாதவன் (24) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் மாதவன், சந்தியாவை கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலை கூறினார்.
திருவிழாவிற்கு வந்திருந்த சந்தியாவிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாதவன் கூறியிருக்கிறார். அதை சந்தியா மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாதவன், தனியாக குளிக்க வந்த சந்தியாவை குன்று பகுதிக்கு தூக்கிச்சென்று கல்லை போடு கொடூரமாக கொலை செய்துள்ளார். இவ்வாறு காவல்துறையினரின் வாக்குமூலத்தில் மாதவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.