கள்ளக்காதலியிடம் இருந்து கணவரை மீட்டுத் தாருங்கள் … மூன்று குழந்தைகளுடன் கதறி அழுத இளம் பெண் !!
தன்னையும் தன் 3 குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்ட கணவரை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி இளம் பெண் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். கைக்குழந்தையுடன் அவர் கதறி அழுதது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த அழகுராஜா என்பவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சிலிங் பிரிவில் பணியாற்றி வருகிறார்.. இவரது மனைவி சாந்தி. சாந்தி, தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு 1 ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் அழகுராஜாவுக்கு ரத்தப் பரிசோதனை மையத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவருடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இதையறிந்த அழகுராஜாவின் மனைவி சாந்தி, தனது கணவரை கண்டித்ததோடு அவருடன் பழகி வந்த அப்பெண்ணையும் எச்சரித்திருக்கிறார்.
இதனிடையே அழகுராஜா சாந்தியின் நகை, பணம் மற்றும் சில சான்றிதழ்களை எடுத்துச் சென்று தலைமறைவாகி விட்டார். மேலும் அவர் பழகி வந்த அப்பெண்ணை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூர் காவல் நிலையத்தில் சாந்தி.புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி சாந்தி தன்னுடைய குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் கணவர் அழகுராஜாவை தன்னிடமே மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனுவும் அளித்திருக்கிறார்.குழந்தைகளுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.