தம்பியையும், நாத்தனாரையும் கொடூரமாக கொன்று புதைத்த அக்கா..! மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!
மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பிக்கும், அவரது மனைவிக்கும் டீயில் விஷம் கொடுத்து கொன்ற அக்காவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் அருகே இருக்கும் மேலபொன்னகரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவரது மனைவி வசந்த மணி(47). இவர்களுக்கு சரண்யா என்கிற மகளும், பாஸ்கரன் என்கிற மகனும் உள்ளனர். செல்வராஜ் சென்னையில் பைனான்சியராக வேலை பார்த்து வருகிறார்.
சரண்யாவிற்கு திருமணமாகி கணவருடன் மதுரையில் வசிக்கிறார். சமீபத்தில் தான் பாஸ்கரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சரண்யா வீட்டிற்கு சென்று செல்வராஜும் அவரது மனைவி பத்திரிகை வைத்துள்ளனர். அதன் பிறகு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் இருக்கும் செல்வராஜின் அக்கா கண்ணம்மா வீட்டிற்கு பத்திரிகை கொடுக்க சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளகோவில் சென்ற பிறகு செல்வராஜை அவரது மகன் பாஸ்கரன் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால் பேசமுடியவில்லை என்று தெரிகிறது. இதனிடையே கரூர் மாவட்டம் சுக்காலியூர்-திருச்சி அணுகுசாலையில் நேற்றுமுன்தினம் இரவு கார் ஒன்று நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தது. நீண்ட நேரமாக கார் நிற்பதை பார்த்து, சுங்கசாவடி ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காருக்குள் ஆய்வு செய்தனர். அங்கு திருமண அழைப்பிதழ்கள் இருந்தது. அதில் இருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு போலீசார் பேசுகையில், பாஸ்கரன் எடுத்தார். அப்போது, தனது பெற்றோரிடம் பேச முயற்சித்ததாகவும் ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
செல்வராஜ் இறுதியாக சென்ற அவரது அக்கா கண்ணம்மா வீட்டிற்கு சென்று காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். காவல்துறையினரின் கிடுக்குபிடி கேள்விகளில் டீயில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து தம்பி செல்வராஜ் , அவரது மனைவி வசந்தமணியை கொன்று வீட்டுக்கு அருகே புதைத்தாக கண்ணம்மா கூறியுள்ளார். இதையடுத்து வீட்டின் அருகே உள்ள குழிக்குள் பாதி புதைக்கப்பட்ட நிலையில் இருவரது சடலங்களையும் காவல்துறையினர் கண்டெடுத்தனர். அதைப்பார்த்து மகன் பாஸ்கரன், மகள் சரண்யா ஆகியோர் கதறி அழுதனர்.
தொடர்ந்து கண்ணம்மா மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்று தம்பதியின் பிணங்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று காவல்துறையினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.
சொத்துக்காக அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது வேறு காரணமா? என கண்ணம்மாவிடம் வெள்ளக்கோவில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.