சர்கார் பட பேனரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்…. தூக்கிட்டு தற்கொலையா ? கொல்லப்பட்டாரா ?
வேலூர் அருகே சர்கார்' படப் பேனரை கிழித்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிந்தார். ஏற்கனவே அவரை பேனர் கிழித்தது தொடர்பாக விஜய் ரசிகர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஈராளச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக பணியர்ற்றி வந்த இவர் தீபாவளி கொண்டாடுவதற்காக தனது சொந் ஊரான ஈளாச்சேரிக்கு வந்திருந்தார்.
இதையடுத்து நேற்று வெளியான 'சர்கார்' படத்திற்கு விஜய் ரசிகர்கள் சிலர், மணிகண்டனின் வீட்டின் அருகே பேனர் வைத்திருந்தனர்.குடிபோதையில் இருந்த மணிகண்டன், 'சர்கார்' பேனரைக் கிழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் சிலர் மணிகண்டனை மீட்டு அவரது சித்தப்பா வீட்டிற்குள் தள்ளி வெளிப்பக்கமாக கதவை பூட்டினர்.
அப்போது 'தன்னைத் தாக்கியவர்களை திரும்பத் தாக்க வேண்டும். கதவைத் திறந்துவிடுங்கள்' என்று மணிகண்டன் கூச்சலிட்டார். உறவினர்கள் கதவைத் திறக்கவில்லை.
அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். சிலமணி நேரம் கழித்து, உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதனால் அதிர்ந்நி அடைந்த உறவினர்கள் மணிகண்டனின் பிணத்தைப் பார்த்து கதறி அழுதனர்.
அப்போது வீட்டு மன் திரண்டிருந்த விஜய் ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து காவேரிப்பாக்கம் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மணிகண்டனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் மணிகண்டன் தற்கொலைச் செய்து கொண்டாரா? அல்லது பூட்டியிருந்த கதவைத் திறந்து மணிகண்டனை அடித்துக்கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.