பெண் தாசில்தார் எரித்துக் கொலை…. அச்சத்தில் கயிறு கட்டி பின்னால் இருந்து மனு வாங்கும் தாசில்தார்கள !!
தெலங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதையடுத்து தற்போது தாசில்தார்கள் அச்சத்தில் கயிறு கட்டி பின்னால் இருந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்ற பெண், தாசில்தார் அவர் அலுவலகத்திலேயே தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தெலங்கானா மற்றும் ஆந்திர அதிகாரிகளிடையே ஒருவித அச்சமும் ஏற்பட்டு இருக்கிறது. ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள தாசில்தாரான உமா மகேஸ்வரியை சந்திக்கவரும் கிராமவாசிகள், அவரது அறையில் போடப்பட்ட கயிற்றின் பின்னால் இருந்து சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தங்கள் மனுவை அளிக்க விரும்புவோர் பாதுகாப்பான தூரத்திலிருந்து ஒப்படைக்க இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. "விஜயா ரெட்டியின் கொலைக்குப் பிறகு நான் அச்சம் அடைந்து உள்ளேன்" என உமாமகேஸ்வரி கலக்கத்துடன் தெரிவித்துள்ளார்.