தலைக்கேறிய மதுபோதையில் தந்தையை அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..! கோவையில் பரபரப்பு..!
கோவை அருகே மது போதையில் தந்தையை அடித்து கொலை செய்த மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் சின்னக்கள்ளிப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் மாகாளி. வயது 60 . இவரது மனைவி பூவாள். இந்த தம்பதியினருக்கு சிவராஜ் என்கிற மகன் உள்ளார். பூவாள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இதனால் மாகாளி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது மகன் சிவராஜ் அதே பகுதியில் மனைவியுடன் மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக தந்தை-மகன் இடையே குடும்ப பிரச்சனைகள் காரணமாக தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சிவராஜ் மது அருந்தி இருக்கிறார். அதிகமான போதையில் தந்தை வீட்டிற்கு சென்ற அவர், மாகாளியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுடிருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த சிவராஜ், தனது தந்தையை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த மாகாளி, சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவராஜ், தந்தையின் உடலை வீட்டின் உள்ளேயே புதைக்க முடிவெடுத்தார். அதற்காக இரவோடு இரவாக குழி தோண்டியிருக்கிறார். இந்த நிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மாகாளி வீட்டிற்கு வந்துள்ளனர். உடனடியாக வீட்டில் இருந்து சிவராஜ் தப்பி ஓடிவிட்டார். மாகாளி இறந்து கிடப்பதை பார்த்த அவர்கள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த சிறுமுகை காவல்துறையினர், மாகாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த சிவராஜ் கைது செய்யப்பட்டார்.
மது போதையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.