பார்ப்பனர்களின் பாலியல் குற்றங்களை வெளியிடுங்கள்... பகிரங்க அழைப்பு விடும் வழக்கறிஞர் அருள்மொழி!!
#MeToo என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட பல திரையுலக புள்ளிகளும் இசைத்துறையைச் சேர்ந்தவர்களும் கலக்கத்தில் உள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் #MeToo ஹேஷ்டேக் மூலம் வெளிச்சத்திற்கு வருகின்றன.
பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். சின்மயிக்கு ஆதரவாக தமிழ் சினிமா மட்டுமல்ல தெலுங்கு திரையுலகம் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் பாடகி சின்மயி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சுவிஸ் நாட்டில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய சின்மயி, பல கர்நாடக இசைக்கலைஞர்களின் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார்.
இதன் மூலம் சின்மயிக்கு சாதி ரீதியிலான நோக்கங்களோ அரசியல் ரீதியான நோக்கங்களோ இல்லை என்பது தெளிவாகிறது. சின்மயி வெளியிட்ட பட்டியலில் பி.எம்.சுந்தரம், பப்பு வேணுகோபால் ராவ், சுனில் கோத்தாரி, லோகானந்தா ஷர்மா, டி.என். சேஷகோபாலன், சசிகிரன். ரவிகிரன் போன்ற கர்நாடக இசைக்கலைஞர்களின் பெயரும் உள்ளது.
சாதி ரீதியான நோக்கங்களோ, அரசியல் ரீதியான நோக்கங்களோ இல்லாத சின்மயின் புகாருக்கு பலர் ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், திராவிடர் இயக்க சிந்தனையாளரும், வழக்கறிஞருமான அருள்மொழி, தங்கள் சாதி ஆட்கள் தவறு செய்தால் அவர்கள் மீது பழி வராமல் பாதுகாப்பதுதான் பார்ப்பனர் இயல்பு. அதை பாடகி சின்மயி உடைத்தெறிந்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில்: தங்கள் சாதி ஆட்கள் தவறு செய்தால் அவர்கள் மீது பழிவராமல் பாதுகாப்பதுதான் பார்ப்பனர் இயல்பு. அதையும் உடைக்கிறார் சின்மயி. இன்னும் யார் யார் மீது பாலியல் புகார்கள் சொல்லப்படுகின்றன என்று அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் இருக்கும் அனைவரும் கர்நாடக இசைத்துறையில் புகழ்பெற்ற பார்ப்பனர்கள்.
எனவே ஆளுநரைக் காப்பாற்ற திசைதிருப்பல் என்ற காரணம் எல்லாம் பொருந்தவில்லை தோழர்களே. காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் மட்டுமே அது பொய் என்று சொல்லி விட முடியாது. மேலும் ஒரு பதிவில் கொஞ்சம் நிதானமாக சிந்திக்க வேண்டிய நேரம். பார்ப்பனர்களை மட்டுமே அம்பலப்படுத்த வேண்டும்.
அது மட்டுமே பெரியாரியம் என்று நம்பும் தோழர்கள் சின்மயியின் ட்விட்டர் #metoo பட்டியலில் வந்து பெண்கள் வெளியிடும் பார்ப்பனர்களின் பெயர்களை பெரிதாக வெளியிடுங்கள். பிரபலப்படுத்துங்கள். அவர்கள் பெயர்களை வெளியிடுபவர்களும் பார்ப்பனப் பெண்களே என்று வழக்கறிஞர் அருள்மொழி கோரிக்கை வைத்துள்ளார்.