பிக் பாஸ் சீசன் 2-ல் ஆரவ்-ஓவியா ஜோடியாகப்போவது யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சிக்கு வந்தாலே பிரபலமாகிவிடலாம் என்பது கோலிவுட்டில் இப்போதைய டிரெண்ட். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் உச்ச கட்ட புகழை அடைந்தவர் ஓவியா.
பிக் பாஸின் முதல் சீசன் ஆரம்பத்தில் களை இல்லாமல் தான் இருந்தது. ஆனால் ஓவியா, ஆரவ் பிரச்சனை என்று ஒன்று ஆரம்பித்த பிறகு தான் டி.ஆர்.பி எகிறியது. இதனால் ஓவியா, ஆரவ் காதல் ஸ்கிரிப்டட் என்று கூட ஒரு கருத்து நிலவியது.
அதன் பிறகு அந்த பிரச்சனைகள் முற்றி, ஓவியா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு போன பிறகு தான், உண்மை என்ன என்பது மக்களுக்கு புரிய தொடங்கியது. இப்போது இருவருமே ஒருவாறு திரையுலகில் செட்டில் ஆகிவிட்டனர்.
சென்ற முறை போல இந்த முறையும் பிக் பாஸில் புதிய ஜோடி உருவாக, அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது, ஒவ்வொரு போட்டியாளர்களிடம் ஒவ்வொரு விதமான கேள்விகள் கேட்கப்பட்டன. வழக்கம் போல குதற்கமான கேள்வியாக தான் பிக் பாஸ் கேட்டிருந்தார்.
உங்களுக்கு யாரை பிடிக்கும்? யாரை பிடிக்காது? யாரை பார்த்தால் எரிச்சல் வருகிறது என ஒவ்வொரு கேள்வியையும் தேர்வு செய்து குறிப்பிட்ட நபர்களுக்கு கொடுத்திருந்தார். ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் பலே கில்லாடிகள். பிரச்சனையில்லா பதிலை கூறி மிகவும் நைசாக நழுவிக்கொண்டனர்.
அதில் பிரபல நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக்கிடம், இங்கு இருப்பவர்களில் யாருடன் நீங்கள் டேட்டிங் செல்ல விரும்புவீர்கள்? என கேட்டிருந்தார் பிக் பாஸ். மிகவும் தயங்கிய அவர் கடைசியில் ஐஸ்வர்யா தத்-ஐ கூறினார்.
அதே போல ஐஸ்வர்யாவிடமும் இங்கு இருக்கும் ஆண்களில் மிகவும் அழகான ஆண் யார்? என கேட்டிருக்கிறார் பிக் பாஸ். அதற்கு ஐஸ்வர்யா ஷாரிக்கை கை காட்டி இருக்கிறார். இதனால் இந்த இருவரையும் இணைத்து வைத்து விளையாடினர் சக போட்டியாளர்கள். இப்படி தான் ஆரவ், ஓவியா விஷயத்தையும் மற்றவர்கள் விளையாட்டாக ஆரம்பித்தனர். பின்னர் அவர்களே பிரித்து வைத்து வினையாக்கவும் செய்தனர். இந்த கதையிலும் என்ன செய்ய போகிறார்களோ? பிக் பாஸே அறிவார்.