விரட்டி விரட்டி வளைக்கப்படும் விஷால்... மேலும் ஒரு அதிரடி வழக்கு..!
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் வழக்குகளால் வளைக்கப்பட்டு வருகிறார். நேற்று இரண்டு வழக்குகள் அவர் மீது பாய்ந்துள்ள நிலையில், மூன்றாவதாக மேலும் ஒரு வழக்கு அவர் மீது அதிரடியாக பதியப்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் வழக்குகளால் வளைக்கப்பட்டு வருகிறார். நேற்று இரண்டு வழக்குகள் அவர் மீது பாய்ந்துள்ள நிலையில், மூன்றாவதாக மேலும் ஒரு வழக்கு அவர் மீது அதிரடியாக பதியப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை விஷாலுக்கு எதிரான அணி, தியாகராயர் நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலவலகத்திற்கு பூட்டு போட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைப்பேன் என்று வந்த விஷால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சட்ட விரோதமாக கூடியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் நடிகர் விஷால் உள்ளிட்ட 8 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் சங்க அலுவலகத்துக்கு சட்ட விரோதமாக பூட்டு போட்டதாக எதிர்தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
அத்துடன் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 145-ன் கீழ் இரு தரப்பினரும் சங்க அலுவலகத்திற்குள் நுழைய தடை விதித்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் விஷால் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 145வது சட்டப்பிரிவின் கீழ் விஷால், மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு சீல் வைத்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு விஷால் தரப்பினர் செய்துள்ளனர்.