கைதி படத்தை ஆஹா... ஓஹோ.. என புகழ்ந்திருக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
வழக்கமாக கோலிவுட்டில் ஹீரோ, ஹீரோயின், பாட்டு, ரொமான்ஸ், காமெடி போன்ற டெம்ப்லேட்டை வைத்துதான் ஒரு படத்தை இயக்குநர்கள் எடுத்து வருகின்றனர்.
ஆனால் அந்த மாதிரியான இயக்குநர் தான் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் தான் 'கைதி'.
ஹீரோயின், பாட்டு, ரொமான்ஸ், காமெடி போன்றவை இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் கதையுடன், விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து கைதி படத்தை மிக கச்சிதமாக கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தீபாவளியை முன்னிட்டு பிகில் படத்துடன் வெளியான கைதி படத்திற்கு முதலில் குறைவான திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக, தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைதி படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, கைதி படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "விறு விறுப்பான ஸ்க்ரிப்டில் த்ரில்லிங் ஆக்ஷன்ஸ் காட்சிகள் நிறைந்த, நியூ ஏஜ் திரைப்படம்தான் கைதி என புகழ்ந்துள்ளார். படத்தில், பாடல்கள் இல்லை என்பது வரவேற்கத்தக்க மாற்றம் எனக்கூறி மொத்த படக்குழுவுக்கும் தனது பாராட்டுக்களை மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபு ட்வீட்டிற்கு நன்றி தெரிவித்து ‘கைதி’ பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பதிலளித்துள்ளார். ஏற்கெனவே கைதி படம் தெலுங்கில் வெளியாகி வசூலை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.