’ஏ.வி.எம்.,கமல், ரஜினி என்று யாரையும் நம்பி நான் சினிமாவுக்கு வரவில்லை’ இளையராஜா மீண்டும் அதிரடி
மாணவர்களாகிய நீங்கள் அசாத்திய தன்னம்பிக்கயோட இருக்கணும். யாரையும் நம்பி இருந்தா வாழ்க்கையில ஜெயிக்கமுடியாது. என்னையே எடுத்துக்கங்க. நான் சினிமாவுக்கு வரும்போது என்னோட ஒரே நண்பன் இந்த ஆர்மோனியப்பெட்டிதான்.
முன்னெப்போதும் இல்லாதவகையில் இந்த ஆண்டு தனது 75 வது பிறந்தநாளை, அழைக்கும் அத்தனை கல்லூரிகளுக்கும் ஆஜராகி, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, பாடல்கள் பாடி, அவர்களுக்கு அசாத்திய தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தனது வாழ்வியல் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார் இசைஞானி இளையராஜா.
அந்த வரிசையில் நேற்றுமுன் தினம் அடையாறு தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜா,’ மாணவர்களாகிய நீங்கள் அசாத்திய தன்னம்பிக்கயோட இருக்கணும். யாரையும் நம்பி இருந்தா வாழ்க்கையில ஜெயிக்கமுடியாது. என்னையே எடுத்துக்கங்க. நான் சினிமாவுக்கு வரும்போது என்னோட ஒரே நண்பன் இந்த ஆர்மோனியப்பெட்டிதான்.
அந்த ஆர்மோனியப்பெட்டியை மட்டும் நம்பித்தான் நான் சென்னைக்கு வந்தேன். ஏ.வி.எம்மை நம்பி வரலை. ரஜினியையோ, கமலையோ நம்பி வரலை. ஆனா அவங்கதான் என்னைத் தேடி வந்தாங்க. அப்படிப்பட்ட தன்னம்பிக்கையோட மாணவர்கள் நீங்க முன்னுக்கு வரணும்’ என்றார் இளையராஜா.
ராஜா இந்த செய்தியைச் சொல்லும்போது மாணவர்கள் மத்தியில் கரகோஷம் விண்ணைப்பிளக்கிறது. ஆனால் சில அரைவேக்காடுகள் ராஜா இப்படிப்பேசுவதை தலைக்கனம் என்கிறார்கள்.